Friday, 29 November 2013

2015–ம் ஆண்டு சந்திரனில் துளசி செடி வளர்க்க நாசா திட்டம்

சந்திரனில் தாவரங்கள் வளரச்செய்யும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஈடுபட உள்ளது. அதற்கான ஆய்வை வருகிற 2015–ம் ஆண்டு தொடங்க உள்ளது.

அதற்கான ஆயத்த பணியை இப்போதே தொடங்கிவிட்டது. அதற்காக எந்த வகை பயிர்களை முளைக்க வைத்து விளைய செய்ய முடியும் என ஆய்வு நடத்தியது.
http://www.maalaimalar.com/2013/11/29112936/Nasa-plans-grow-basil-plant-in.html

அதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி, துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ் என்ற ஒருவகை தாவரம் பயிரிட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் விதைகள் 5 முதல் 10 நாட்களில் முளைக்கும் தன்மை உடையது.

இந்த விதைகளை முளைக்க வைத்து காய்கறி விளைவிப்பதன் மூலம் அங்கு மனிதன் தங்கி உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் தொடர்ந்து நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.

தாவரங்களை வளர்ப்பதற்காக சந்திரனுக்கு வருகிற 2015–ம் ஆண்டில் ஒரு ஆய்வு கூடம் அனுப்பப்படுகிறது. அதில் 5 முதல் 10 நாட்களில் முளைத்து வளரக்கூடிய டக்னிப், அராபி, டோப்சிஸ், ஓமம், துளசி செடி வகைகளின் விதைகளும் எடுத்து செல்லப்படுகின்றன.

இந்த தாவரங்கள் செழித்து வளரும் பட்சத்தில் அங்கு மனிதனும் வாழ முடியும் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதற்கான ஆய்வும் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னோடி ஆராய்ச்சியாக தாவரங்கள் பயிரிடப்படுகிறது.

Thursday, 28 November 2013

அரசியலமைப்பின் கடமைகளை நிறைவேற்ற காங்கிரஸ் தவறிவிட்டது: மோடி குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 1-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். சிகர் என்னுமிடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ஏழை மக்களுக்காக பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக கூறினார்.

http://www.maalaimalar.com/2013/11/28163122/Modi-says-Congress-fails-to-fu.html


இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று அதே சிகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது சோனியா காந்தி பற்றி அவர் பேசியதாவது:-

ஏழைகளுக்கான சட்டத்தை உருவாக்கும் சோனியா காந்தி, அதை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நிறைவேற்றுவது கிடையாது. பாபா சாகேப் பீமா ராவ் அம்பேத்கார், ஏழை மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு படிப்பறிவை கொடுக்கவும் சட்டத்தை உருவாக்கினார்.

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்த அரசியலமைப்பின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றியிருக்கவில்லை. கடந்த 60 வருடங்களாக அவர்கள் நாட்டை அழித்து இருக்கிறார்கள்.

துப்பாக்கிக்கு பதில், துப்பாக்கிக்கான லைசென்சை ஒரு சிங்கத்திடம் காட்டுகிறீர்கள். இதை கண்டு அது பயப்படப் போவதில்லை. அதேபோன்று ஏழைகளுக்கான சட்டத்தை உருவாக்குவது மட்டும் போதாது. அதை நடைமுறைப்படுத்துவது மிக அவசியம்.

உச்ச நீதிமன்றத்தை கூட கண்டுகொள்ளாமல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏழைகளுக்கான திட்டங்களை நிறைவேற்றவில்லை. ரெயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான டன் கோதுமைகளை அவர்கள் அழிவதற்கு அனுமதிக்கிறார்கள்.

அழிந்துகொண்டிருக்கிற அந்த கோதுமைகளை ஒரு கிலோ 80 பைசா விலைக்கு ஒயின் தயாரிப்பு கம்பெனிகளுக்கு விற்றுவிடுகிறார்கள். அதை ஏழைகளுக்கு கொடுப்பதில்லை.

ராஜஸ்தானின் சிகர் உள்ளிட்ட பகுதிகள் பயன்பெறும் நதிகளை இணைக்கும் வாஜ்பாயின் கனவு திட்டத்தினை காங்கிரஸ் தலமையிலான அரசு நிறைவேற்றவில்லை இவ்வாறு அவர் பேசினார்.

Wednesday, 27 November 2013

டிசம்பர் 1–ந்தேதி செவ்வாய் கிரகத்துக்கு திசை திரும்புகிறது மங்கள்யான்

மங்கள்யான் விண்கலம் வருகிற 1–ந்தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்பப்படுகிறது.

செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி உள்ளது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
http://www.maalaimalar.com/2013/11/27135204/mangalyan-turn-to-mars-in-dece.html

பூமியைச் சுற்றி வரும் மங்கள்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. சுற்று வட்டப்பாதையை உயர்த்தும்போது மங்கள்யானில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயங்கவில்லை என்றாலும் அதில் உள்ள எரிபொருள்கள் வீணாகாததால் ராக்கெட்டுகளை மீண்டும் இயக்கும் பணி நடந்தது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர்.

தற்போது பூமியின் சுற்று வட்டப்பாதையில் 2 லட்சம் கி.மீ. தூரத்தை விண்கலம் எட்டி விட்டதால் அடுத்தகட்டமாக மங்கள்யானை செவ்வாய் கிரகம் நோக்கி திசை திரும்பும் பணி நடைபெறுகிறது. வருகிற 1–ந்தேதி இந்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்புவது என்பது மிகவும் சிக்கலானது என்பதால் மங்கள்யானுக்கு இது முக்கிய கட்டமாகும். செவ்வாய் நோக்கி பயணத்தை திசை திருப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
ஏற்கனவே சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை அதிகரிப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டபோதும் விஞ்ஞானிகள் அதை வெற்றிகரமாக சமாளித்து விட்டனர். தற்போது டிசம்பர் 1–ந்தேதி முக்கிய கட்டம் என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பதற்றத்தில் உள்ளனர்.

Tuesday, 26 November 2013

பெருநாட்டில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி

பெருநாட்டில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.
http://www.maalaimalar.com/2013/11/26112608/55-earthquake-in-beru-country.html


தென் அமெரிக்காவின் பெருநாட்டில் நேற்று மாலை 3.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் லிமா மற்றும் அதை சுற்றியுள்ள 72 மைல் சுற்றளவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர்.

இங்கு 5.5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குயில்மானா பகுதியில் பூமிக்கு அடியில் 26 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.

Friday, 22 November 2013

சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் கூடுதல் பாதுகாப்பு: துப்பாக்கி ஏந்திய காவலாளிகளை நியமிக்க உத்தரவு

பெங்களூரில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் வைத்து, பெண் தாக்கப்பட்டு, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னையிலும் வங்கி ஏ.டி.எம். மையங்களில் இதுபோல் கொள்ளைச்சம்பவங்கள் நடக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே சென்னை நீலாங்கரையில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தை உடைத்து, லட்சக்கணக்கில் பணம் கொள்ளைபோனது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில், லட்சக்கணக்கான பணத்துடன், எந்திரத்தையே பெயர்த்து எடுத்துச் சென்று விட்டனர்.

அந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்பட வில்லை. சென்னை ஐஸ்-அவுசில் கூட ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. தற்போது பெங்களூரில் பெண் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளதால், சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.


வங்கி ஏ.டி.எம். மையங்களில் துப்பாக்கி ஏந்திய காவலாளிகளை நியமிக்க வேண்டும். இணையதள தொடர்புடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை, ஏ.டி.எம். மையத்தின் உள்ளேயும், வெளியேயும் கண்டிப்பாக நிறுவ வேண்டும்.

மேலும் ஏ.டி.எம். மையங்களுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பணத்தை எடுத்து செல்லும்போது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்ல வேண்டும். அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர்கள் தங்கள் எல்லையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் சென்று பார்வையிட்டு, கண்டிப்பாக காவலாளிகளை நியமிக்க வங்கி நிர்வாகத்திற்கு எடுத்துரைக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரோந்து போலீசாரும் அடிக்கடி ஏ.டி.எம். மையம் உள்ள இடங்களில் சென்று கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. சென்னையில் 4 ஆயிரம் ஏ.டி.எம். மையங்களும், தமிழகம் முழுவதும் சுமார் 22 ஆயிரம் ஏ.டி.எம். மையங்களும் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜமும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், வங்கி ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலாளிகள் தூங்காமல் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், போலீசார் நேரடியாக சென்று அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

Thursday, 21 November 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றதற்கு எதிராக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

இலங்கையில் நடந்த இறுதி போரில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர், அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்றும், அதனால் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால் இந்திய அரசு சார்பில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்போது சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வக்கீல்கள் சுந்தரவதனம், ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்று மத்திய அரசு எடுத்த முடிவும், வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்து கொண்டதும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

1994–ம் ஆண்டில் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு அடிப்படை கட்டமைப்புகளை மீறாமல் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

அதன் பிறகும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், மக்களின் போராட்டங்களுக்கு பிறகும், மத்திய அரசு தமிழகத்தின் பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள முடிவெடுத்தது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது.

இனி இலங்கை குறித்த வெளியுறவு தொடர்பான விஷயங்களை தமிழ்நாடு அரசு அல்லது தமிழ் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகியிருக்கிறோம் என்றும் மனுதாரர் சுந்தரவதனன், மனுவை தாக்கல் செய்த வக்கீல் ராஜாராமன் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். இந்த வழக்கு இன்னும் இரண்டு வாரங்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Friday, 8 November 2013

இலங்கை சிறையில் உள்ள 86 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

பாக் ஜல சந்தியில் தங்களது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிக்கு சென்று மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி, பிடித்துச் செல்வது பற்றி மிகுந்த மன வேதனையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.

தமிழக மீனவர்களின் இந்த வாழ்வாதார பிரச்சினைப் பற்றி நான் உங்களுக்கு பல தடவை கடிதங்கள் எழுதியுள்ள போதிலும், இலங்கை கடற்படையினர் கேள்வி கேட்பாரின்றி தமிழக மீனவர்களை தாக்கி சித்ரவதை செய்வது தொடர்கிறது. இந்திய அரசு இந்த விஷயத்தில் மவுனமாகவும், அக்கறை இல்லாத போக்குடனும் இருப்பதால்தான் இலங்கை கடற்படை இப்படி அதிகாரம் கொண்டது போல அத்துமீறி செயல்படுகிறது.

இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்க வைக்கும் மற்றொரு நிகழ்வாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 4–11–2013 அன்று ஐஎன்டி–டி.என்.–10 எம்எம்–333, ஐ.என்டி–டி.என்–10– எம்எம்–158, ஐஎன்டி–டிஎன்–10–எம்எம் – 104 ஆகிய 3 எந்திரப் படகுகளில் மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்கள் 5–11–2013 அன்று இலங்கை கடற்படையால் தாக்கி பிடித்து செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

அதே தினத்தன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் ஐஎன் டி–டிஎன்–08 – எம்எம்–028, ஐஎன்டி–டிஎன்–08– எம் எம்–404, ஐஎன்டி– டிஎன்–08 –எம்எம்–082, ஐஎன்டி– டிஎன்–08 – எம்எம்–318 ஆகிய 4 எந்திரப் படகுகளில் சென்று மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

5–11–2013 தினத்தன்று மட்டும் இந்த 30 தமிழக மீனவர்கள் 7 படகுகளுடன் சட்ட விரோதமாக இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு 56 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் இப்படி சட்ட விரோதமாக பிடித்துச் செல்லப்பட்டு இலங்கையில் உள்ள ஜெயில்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அந்த ஏழை மீனவர்களின் 35 மீன்பிடி படகுகள் இன்னமும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழக மீனவர்களை துன்புறுத்தி, சித்ரவதை செய்து, அவர்களது ஏழ்மையான வாழ்வாதாரத்தையே சீர்குலைத்து வரும் இலங்கையின் இந்த நடவடிக்கை மிக, மிக கண்டனத்துக்குரியது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலை இனியும் இந்திய அரசு தொடர்ந்து மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க கூடாது.

தாங்கள் உடனடியாக இந்த பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதுபற்றி உயர்மட்ட தூதரக அளவில் கொண்டு சென்று இலங்கை சிறைகளில் உள்ள 86 தமிழக மீனவர்களையும் உடனே மீட்க வேண்டும்.

மேலும் இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் 42 மீன்பிடி படகுகளையும் விரைந்து மீட்க வேண்டும். நீங்கள் இதில் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று மீண்டும் ஒரு தடவை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.